புதன், 15 நவம்பர், 2017

குழந்தை = தெய்வம்

குழந்தை = தெய்வம்

          “யாழினிக்குப் பிறந்த நாள் நவம்பா் 20, கொஞ்சமாவது ஞாபகமிருக்கா?”  வித்யாவின் கேள்விக்கு நெற்றி சுருக்கினான் மைக்கேல்.
          “ஏன் இப்படி கேக்குற?  ஞாபகமில்லாமல் இருக்குமா?”
          “இல்ல.. அதுக்கான அறிகுறியே தெரியலியே... அதான் கேட்டேன்.”
          “அம்மாக்களுக்கு பிள்ளைகளின் பிறந்தநாள்கள்தான் உண்மையான திருவிழாக்கள் மனதிற்குள் நினைத்தவாறே சிரித்துக் கொண்டான்,
          “இன்னும் நாலு நாளிருக்கு... பார்த்துக்கலாம்.  பாப்பா.. இங்க  வாடா.. உனக்கு எந்த மாதிரி டிரஸ் வேணும்”  பக்கத்தில் வந்த மகளை மடியில் அமர்த்திக்கொண்டு கேட்டான்.
          “எனக்குத்தான் டிரஸ் இருக்கே.. வேண்டாம்பா,” யோசிக்காமல் பதில் சொன்ன மூன்று வயது மகள் யாழினியை முறைத்தாள் வித்யா.
          “அப்பாவுக்கேத்த பிள்ளை.. உனக்குப் போய் நா வக்காலத்து வாங்குறேன் பாரு.. என்னையச் சொல்லனும்..”  பொய்யாய்க் கோபித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
          எழுதிக்கொண்டிருந்ததை மீண்டும் தொடா்ந்தான், “அப்பா.. நானும் எழுதுறேன்” அடம் பிடித்து பேனாவைப் பிடுங்கிக்கொண்டு பிடிவாதமாய் எழுத எத்தனித்தவளை எவ்வளவோ கெஞ்சியும் சமாளிக்க முடியாமல் எழுதி முடிக்க வேண்டுமென்ற அவசரத்திலும் ஆத்திரத்திலும் வெறித்தனமாய் ஓங்கி அடித்தான்.
          அலறி சுருண்டு கதறி அழுதான்.. பிள்ளை, கொஞ்சம் பதறியது ஓடிவந்து வாரிச் சுருட்டி அணைத்துக்கொண்டாள் வித்யா.
          “குழந்தை எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டதில் என்ன தவறிருக்கிறது?  வேறொரு போனா, வேறொரு தாள் எடுத்துக் கொடுத்திருந்தால் குழந்தையும் எழுதி இருப்பாள்.  தன்னாலும் எழுதி முடித்திருக்க முடியும்.  ஆனால் இப்பொழுது தன் மிருகத்தனத்தால் இரண்டுமே நடக்காமல் போய்விட்டது.
          உடம்பு சாயில்லாமல் தான் படுத்திருந்தபோது அடிக்கடி ஓடி வந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்து “அப்பாவுக்கு சீக்கிரம் சாயாய்டனும் சேசப்பா” என்று கைகூப்பித் தொழுதவளையா இன்று அழவைத்துவிட்டோம்?  அன்றொரு நாள் காலையில் ஏழுமணியாகியும் படுக்கையில் எழாமல் சோம்பலாய்ப் படுத்திருந்தபோது “அப்பா.. எந்திரிப்பா.. சும்மா படுத்துக்கிட்டு.  எந்திரிச்சு படிப்பா.. எழுதுப்பா”  என்று அதிகாரம் செலுத்தியதைக் கண்டு அசந்து வாயடைத்து நின்ற நானா பிள்ளையை அலற வைத்தது?!  தன்னை நினைக்க நினைக்க அருவருப்பாய் இருந்தது.. மைக்கேலுக்கு,
          ஆத்திரக் குப்பைகளைக் கொட்டித் தீா்ப்பதற்கு பிள்ளைளென்ன குப்பைத்தொட்டிகளா?  எங்கெங்கோ நேரம் ஒதுக்காமையை நினைத்து நினைத்து வருந்தினான்.
          அறைக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் அழுகை ஓய்ந்து, வீசும்பல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.  கள்ளங்கபடமில்லா குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசியது.
          பல நேரங்களில் சிறுபிள்ளைகள் பெரியவா்களைப் போல பேசுகிறார்கள்.  பெரியவா்கள் சிறுமைத்தனமாய் நடந்துகொள்கிறார்கள்.
          மகளிடம் மன்னிப்புக் கேட்டு எப்படியாவது சமாதானப்படுத்தினால்தான் நிம்மதியாயிருக்கும்.  இப்பொழும்கூட தன் மன நிம்மதிக்காகவே பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க நினைத்த சுயநலம் தானிருந்தது.
          “யாழினி..”  கூப்பிட்டதும் “போ.. உங்கூட பேச மாட்டேன்” என்று சொல்லி முகம் திருப்பின் கொண்டாள் குழந்தை
          குழந்தையின் கோபத்திற்குக் கூட இவ்வளவு சூடு இருக்குமா? பிள்ளையின் கோபம் உள்ளத்தைச் சுட்டது.
          எழுத வைத்திருந்த எல்லாவற்றையும் மூடிவிட்டு மனதைப் போலவும் முகமும் இறுகி தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான்,  நடப்பதையெல்லாம்  ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டிருந்த பிள்ளை கொஞ்சங்கொஞ்சமாய் அருகில் வந்து அழைத்தாள். “அப்பா..” பதில்லை பிஞ்சு விரல்களால் தட்டி “அப்பா.. அப்போவ்” “ம்ம்..” குரல் கம்மியது  மைக்கேலுக்கு, “நீ அடிச்சல்ல அதான் கோவப்பட்டேன் . ஸாரி” என்று கொஞ்சிப் பேசி சிரித்தவள், முகத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.
          உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த குமுறலை கண்கள் கசிய மத்த மழையால் கொட்டித தீா்த்தான். “மன்னிச்சிடும்மா.. அப்பா மேலதான் தப்பு”  என்று கையெழுத்துக் கும்பிட பதிலுக்கு கும்பிட்டபடி சிரித்துக் கொண்டே யாழினி சொன்னாள் “சமாதானம்.. சமாதானம்”.

          குழந்தை - உணா்ந்தவா்களுக்கே பெரும் தெய்வம்
                 உணராதவா்களுக்கு வெறும் பொம்மை
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக