செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

உலகத் தாய்மொழி நாள்

மொழிபல கற்கச் செல்லுங்கள்-ஆனால்
முத்தமிழ் உயிராய்ச் சொல்லுங்கள்..
இழிசெயல் சாய்த்தே வெல்லுங்கள்-நாட்டில்
எழில்வளங் காண நில்லுங்கள்
-கவியரசர் முடியரசன்.

உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துகள்..உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21
நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவற்றில் ஒன்று மொழி. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏதோ ஒரு வகையில் மொழி உள்ளது. பேச்சு, எழுத்து, குரல் வழியாக (வானொலி), காட்சியுடனான எழுத்து வழியாக (காணொளி) எனப் பல வகைகளில் மொழி உள்ளது.
மொழி இருப்பதால்தான், எல்லா விஷயங்களையும் அடையாளப்படுத்தி, புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா? மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடையிலான அறிவு வளர்ச்சி இடைவெளிக்கு மொழியே காரணம் என்கிறார் குரங்கு ஆராய்ச்சியாளர் ஜேன் குடால்.
மொழியின் வழியாக அனுபவங்களும் வரலாறும் காலங்காலமாக நினைவுகூரப்படுவதே முக்கியக் காரணம். அதிலும் நமது தாய்மொழியே அறிவு வளர்ச்சிக்கு முழு முதற் காரணமாக இருக்கிறது.
பிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதையொட்டி உலக மொழிகளைப் பற்றிச் சில சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?
# எஸ்பிரான்டோ என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. இதை 5 லட்சம் பேர் முதல் 20 லட்சம் பேர்வரை பேசுகிறார்கள். இந்த மொழியில் 2 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
# அமெரிக்க நாட்டில் ஆட்சி மொழி கிடையாது. ஆனால், ஆங்கிலத்தில்தான் கிட்டத்தட்ட எல்லாத் தகவல் பரிமாற்றங்களும் நடைபெறுகின்றன.
# ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ மொழிகள் 6.
# கிறிஸ்தவப் புனித நூலான பைபிள் 2,454 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
# உலகில் 2,400 மொழிகள் அழியும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
# சராசரியாக ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு மொழி அழிந்துபோவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
# கிழக்கு சைபீரியா, வட அமெரிக்காவின் வடமேற்கு பசிபிக் பகுதி, வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகள் அழியும் தறுவாயில் உள்ள பல மொழிகளைக் கொண்டுள்ளன.
# 231 மொழிகள் ஏற்கெனவே முற்றிலும் அழிந்து போய்விட்டன.
# ஒரு கணக்குப்படி சராசரியாக ஒரு நாளைக்கு 4,800 வார்த்தைகளை ஒவ்வொருவரும் பேசுகிறோம்.
# ஆப்பிரிக்க நாடுகளிலேயே சோமாலியாவில் மட்டும்தான், நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசுகின்றனர். அது சோமாலி மொழி.
# ஆசிய கண்டத்தில் மட்டும் 2,200 மொழிகள் இருக்கின்றன.
# சீன மொழியான மாண்டரினில் 50,000 எழுத்துகள் உள்ளன. எல்லாம் சித்திர எழுத்துகள். ஒரு நாளிதழைப் படித்துச் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்கூட 2,000 எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும்.
# உலகில் 2,700 மொழிகளும், 7,000 வட்டார வழக்குகளும் இருக்கின்றன. வட்டார வழக்கு என்பது குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒரு மொழியின் துணைப் பிரிவு என்று சொல்லலாம்.
அந்தப் பகுதிக்கெனத் தனிச் சொற்கள், உச்சரிப்புடன் அது அமைந்து இருக்கும். (உதாரணத்துக்குச் சென்னை, நெல்லை, கோவையில் பேசும் வேறுபட்ட தமிழைப் போல)
# உலகின் முதல் எழுத்து மொழி கி.மு. 4500-ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
# இந்தியாவில் நான்கு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. இந்தோ-ஐரோப்பிய, திராவிட, ஆஸ்திர-ஆசியா (அசாம், வடகிழக்கு இனக் குழுக்கள்), சினோ-திபெத்திய (வட இமாலய, மியான்மர் எல்லைப்புறப் பகுதிகள்) மொழிக் குடும்பங்களே அவை.
தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. திராவிட மொழிக் குடும்பத்தின் தாய், தமிழ். இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் 33 மொழிகளும், 2000 வட்டார வழக்குகளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
# உலகில் 12.44 சதவீதம் பேருக்கு சீனாவின் மாண்டரின் மொழியே தாய்மொழி. சீன மக்கள்தொகை அதிகம் என்பதும்கூட, இதற்கு ஒரு காரணம்.
# ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.
# தென்னாப்பிரிக்காவின் ஆட்சி மொழிகள் 11. உலகில் அதிக அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ள நாடு இது.                                                    
                                                                  - தி இந்து

உலகத் தாய்மொழி நாள்

மொழிபல கற்கச் செல்லுங்கள்-ஆனால்
முத்தமிழ் உயிராய்ச் சொல்லுங்கள்..
இழிசெயல் சாய்த்தே வெல்லுங்கள்-நாட்டில்
எழில்வளங் காண நில்லுங்கள்
-கவியரசர் முடியரசன்.

உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துகள்..

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.


இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.


தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.


சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு.


"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.


இனத்தின் அடையாளம் மொழி:


உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


மொழிகள், தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன. பேச்சு வழக்கை தாண்டி, கல்வியிலும் மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. 


எத்தனை மொழிகள்:


இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 


எப்படி தொடங்கியது:


இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உருது இருந்தது. 1952ம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்தனர். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1952, பிப்., 21ம் தேதி ஊரடங்கு உத்தரவையும், மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, 1999ல் இத்தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது.


தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:


மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும். 


மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.தாய் மொழியின் பெருமை பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்?


க.ஞானசம்பந்தன் பேராசிரியர், தியாகராஜர் கல்லூரி, மதுரை.:தாயிடமிருந்து பெறுகிற முதல் விஷயம், அவள் கற்றுத் தரும் மொழி தான். "அவள் வாத்திச்சி... அறை வீடு கழகம்' என்பார், பாரதிதாசன். அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, உயர்வடைவர். 


வி.தங்கமணி குடும்பத்தலைவி, மதுரை:எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திருந்தேன். தமிழே வரவில்லை. எனவே, நான்காம் வகுப்பில் இருந்து தமிழ்வழிக் கல்விக்கு மாற்றினேன். தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறாள். மகன் தமிழ் வழியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி நன்கு தெரிந்தால் தான், பிறமொழிகளை எளிதாக படிக்க முடியும். எனவே, கல்லூரி செல்லும் வரை, தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.


இ.வீரத்தேவன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். எங்கள் பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துகிறோம். நன்றாக உச்சரிக்கும் ஒரு மாணவன், உச்சரிப்பு சரியில்லாத மாணவனை தத்தெடுக்க வேண்டும். அந்த மாணவனுக்கு உச்சரிப்புத் திறனை கற்றுத் தர வேண்டும். இந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பர். தமிழின் சிறப்பு எழுத்துக்களை, பழைய பழமொழி, புதிர், விடுகதைகள் மூலம் கூறுகிறோம்.


கருவில் கற்கும் மொழி :


தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.


அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால் 
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.


தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்.


கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்: இன்றைய தலைமுறையினருக்கு, தாய்மொழி தினம் இருப்பதே தெரியாது. அதைக் கொண்டாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். எதற்கெடுத்தாலும் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் சூழல்; அதை விட அவலமான விஷயம், தமிழில் படிப்பதை, பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்பது. மேலை நாடுகளுக்குச் செல்லும் போது, ஒரு ஆப்பிரிக்கன் இன்னொரு ஆப்பிரிக்கனை சந்தித்தால், நைஜிரிய மொழியில் தான் பேசுவார். எல்லா மொழி பேசுபவர்களும் அப்படித்தான். ஆனால் தமிழன் இன்னொரு தமிழனை சந்தித்தால், ஆங்கிலத்தில் பேசுகின்றார்.தமிழ் மொழி, 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும், புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ், செம்மொழி ஆக்கப்பட்ட பின், ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ், வானவியல் சாஸ்திரம், கணிதம் குறித்த சொற்கள், பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை, இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பெயர்களை, தமிழில் சொல்ல முடியவில்லை என, கூறமுடியாது. தமிழனைப் போல அகம், புறம் என, வாழ்க்கையை பிரித்து, அதன்படி வாழ்ந்தவர்கள், வேறு நாட்டில் கிடையாது.


-dinamalar

Read more: http://www.penmai.com/forums/festivals-special-days/46577-ulaga-thaai-mozhi-dhinam.html#ixzz4ZIDmWmPf

சனி, 18 பிப்ரவரி, 2017

பார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் போற்றி என்றும் பண் பாடு…

தி.பி-2048 (கி.பி.2017)                       மாசித்திங்கள்(பிப்ரவரி)

தேன்:1                                                    துளி:2                                                              
                    
      பார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை
      சீர்  போற்றி    என்றும் பண் பாடு………

உயிர் தமிழ் எனதென்று உரக்கச் சொல்லும் இனிய உள்ளங்களுக்கு,

              உயர் வணக்கம்.

      காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர்களால் சென்ற திங்களில்  தொடங்கப்பெற்ற இத்தேமதுரம் தெவிட்டாத அமுத ஊற்றாய் உங்கள்  பார்வைக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று நம்புகிறோம். தைத் திங்களில் நாங்களிட்ட வித்தினை விளைச்சலாக்கும் முயற்சியில்  மகத்துவமான மாசியில் இந்த மதுரம் வெளிவருகிறது.
        தமிழ் மாதங்களில் மாசி மாதம் மேன்மையானது. தை மாதத்தில் வழி காணும் மக்கள் மாசியில் வாழ்வின் ஒளி காண்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும், பெருங்கடற் கரைகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆன்மீகப் பெரியோர்கள் கொண்டாடும் மாதம் மாசி. இறைவனின் அருளாசி பெற மாசிமகத்தில் கடலாடுவது தமிழர் பண்பாடு.
         சங்கப் பனுவல்களை எல்லாம் முயற்சியின் பிறப்பிடமாய் நின்று நிலைப்படுத்திய நம் தமிழ்த்தாத்தா .வே.சா  அவர்கள் பிறந்த மாசற்ற மாதம் மாசி. கிழக்கு திசையில் புதிய பல விடியல்களைத் தந்த எழுச்சிமிகு கவிஞர் தாராபாரதியைத் தந்தது மாசி மாதம். மாசியின் மகத்தில் பிறந்தவர் அகிலத்தை ஆள முடியும் என்னும் ஆழ் நம்பிக்கையை மனதின் மையத்தில் வீழச் செய்த மாதம் மாசி.

         அருட்செறிவும், அறிவுச்செறிவும் நிறைந்த இந்த மாசியில், பெரும்புயலாய் வீசி வரும் எங்கள் கருத்து மண்டலம் உங்கள் கணிணித் திரையில் மையம் கொள்ளும் என்னும் நம்பிக்கையோடு…..

                                                   ஆசிரியர் குழு,
                                    தேமதுரம் - மின்னிதழ்

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நிலைக்கட்டும் நிலத்தடிநீர்



நிலைக்கட்டும் நிலத்தடிநீர்


முகவுரை:
          “நீரின்றி அமையாது உலகம்” என்கிறது வள்ளுவம். உலக உயிர்களின் அடிப்படை ஆதாரம் நீர் ஆகும். உலகு உய்வதற்கான நீரை நிறைவாகப் பெறுவதன் வாயிலாக நாடு நலம் பெற முடியும். இன்றியமையாமையின் இருத்தலின் விளைவான நீர் பெறும் வழிமுறைகள் இரண்டு. ஒன்று வான்வழி வரும் மழை. மற்றொன்று நிலமகள் தரும் ஊற்று. வான்மங்கை பொய்த்தாலும் நிலமகள் வளத்தைத் தந்தருள்வாள் என்ற எண்ணம் மக்களிடம் என்றும் உண்டு. இத்தகைய நிலத்தடி நீரின் மாண்பு, காப்பதன் நோக்கம் மற்றும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவுறக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
பண்டைத்தமிழகத்தில் நீர் மேலாண்மை:
         பண்டைத் தமிழர்கள் பல துறையில் சிறந்து விளங்கியது போலவே நீர் வளத்துறையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளமைக்கு எண்ணற்ற சான்றுகள் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கிய காலம் நீர் வளத்தை மதித்த  வளமிக்க காலம். வான் மழையைப் பெற்று நிலத்தில் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கி வளம் சேர்த்த  காலம். பண்டை மக்கள் மழையைச் சேமிக்க ஏரி குளங்களை அமைத்த செய்தியை புறநானூறு,
           “நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
            தட்டோரம்ம இவன் தட்டோரே
            தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”
என்கிறது. இந்த சங்கச்  சான்று பழந்தமிழக நீர் மேலாண்மையைப் பறை சாற்றும் ஆதாரமாய் நிற்கிறது.


மெல்ல மரணிக்கும் நிலத்தடி நீர்:
             சங்க காலத்தில் பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் வளர்ந்து வரும் சமுதாயச் சூழலில் சீர் கேடடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள், செயற்கை வேளாண் இரசாயனங்கள், கடின உலோகங்கள்,தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள் , அளவிற்கு அதிகமான அங்கக பொருட்கள், படிமானங்கள், தொற்று ஏற்படுத்தும் கிருமிகள், காற்று வெப்ப மண் மாசுபாடுகள் ஆகியவை நிலத்தடி நீரை மரணிக்கச் செய்கின்றன.இதன் காரணமாய் மண்ணும், மரமும், மனித சமுதாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரைக் காப்பதற்கான வழிமுறைகள்:
             ஊட்டப் பொருள் மற்றும் உயிர்கொல்லி மருந்துகளைக் குறைத்தல், கழிவு நீரின் அளவைக் குறைத்தல், எண்ணைத் திரவியங்கள் நீரில் கலப்பதனைத் தடுத்தல், வேதிப் பொருள்களை நீரில் கலவாமல் காத்தல், புவி வெப்பமாயதலுக்கு எதிராகப் போராடுதல் போன்றவற்றின் வாயிலாக நிலத்தடி நீரைக் காக்க இயலும். கிணற்றால் அன்று ஊற்றெடுத்த வளம் இன்று பாதுகாப்பில்லாமல் பாழுங்கிணறாய்  மாறிவிட்டது. பெருகிவிட்ட சீமைக்கருவேலங்களால் அருகிவிட்ட நிலத்தடி நீரை அம்மரங்களை வேரறுப்பதன் வாயிலாகக் காக்க முடியும்.
அமுதமாகிய நீர்:
             இயற்கை கொடையாம் நீரை காசுக்கு விற்பனையாக்கும் நிலை இன்று வந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால்,
                   “ஆலை பூதகிகள்
                    பாலை பீச்சுவதால்
                    நாறும் ஆறுகளில்
                  ஜீவன் ஏதுமில்லை
                  தேசம் தாண்டுகின்ற
                  சாயத்துணிக் கழிவால்
                  நதியில் மீன்களில்லை
                  நாளை…..,…..
                  நதிகளுமில்லை..”
என்னும் கவிதை நனவாகக் கூடும். எனவே நிலத்தடி நீரை அமுதமாக எண்ணிக் காக்க வேண்டும்.
நிறைவுரை:
           ”திரவத் தங்கம்” என்றழைக்கப்படும் தண்ணீரால் தான் உலகம் திடமடையும். நிலத்தடி நீரை காக்காவிட்டால் உலகத்தின் மூன்றாம் போர் நீரால் அடைவது திண்ணம்.எனவே இனி வரும் காலங்களில் நீரை முனைந்து காப்போம்.வழிந்தோடும் ஒவ்வொரு துளி நீரும் நமது அடுத்த தலைமுறைக்கான சொத்து என்பதை மறவாமல் மனதில் பதிவோம்.

              “ நீரைப் போற்றுவோம்
                நீடூழி வாழ்வோம்”
                                              -நெ.கிருஷ்ணவேணி